தினம் தினம் சூடாக இருந்த சென்னை நேற்று ஜில்லென மாறியது. நேற்று மாலை வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் மாலைக்குப் பின் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்தது. அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசண்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில்  கனமழை பெய்தது. 



அதேபோல், சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் சென்னையின் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மட்டுமின்றி கடுமையான இடி மின்னலும் இருந்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை பாதித்தது. 



இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் காரைகால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரும்பிச்சென்ற விமானங்கள்:


சென்னையில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் நேற்று மழை பெய்ததால் துபாய், பக்ரைன், ஹாங்காங், மும்பை, லக்னோ ஆகிய இடங்களிலிருந்து  சென்னை வந்த 5  விமானங்கள் தரையிறங்க முடியாமல்,பெங்களூருக்கு திரும்பிச் சென்றன. மேலும் 20 விமானங்கள் இயங்க தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


பக்ரையினிலிருந்து 167 பயணிகளுடன் சென்னை வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 204 பயணிகளுடன் வந்த கேத்தே பசிபிக் விமானம் மற்றும் மும்பை, லக்னோ விலிருந்து வந்த 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் மதுரை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, திருச்சி, கொல்கத்தா உள்ளிட்ட  இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு தாமதமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. 


இதை போல் சென்னையில் இருந்து துபாய், பக்ரைன், திருச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும்  விமானங்களும் தாமதமாக புறப்பட்டது.