தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டில் தற்போது நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க 10 வார்டுகளிலும், தி.மு.க 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்  இன்று மறைமுக தேர்தல் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தி.மு.க. வினர் வெளிநபர் உள்ளே வந்ததாக கூறி தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர், இந்த தகவல் அறிந்த தி.மு.க ஆதரவாளர்கள் வெளியே போலீசாரிடம் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.




தொடர்ந்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் ஆவணங்களை கிழித்ததாக கூறப்படுகிறது, அதன்படி தேர்தலை முறைப்படி நடத்த  தேர்தல் அதிகாரி அலுவலரின் கோரிக்கையை ஏற்று தி.மு.க. கவுன்சிலர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.