தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 11 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை     ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஏப்ரல் 12 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


ஏப்ரல் 14 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 


இன்று, அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். இதர தமிழக பகுதிகளில் ஒருசில  இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°–41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்   34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.


10.04.2024 மற்றும் 11.04.2024: அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.


ஈரப்பதம்: 


09.04.2024 முதல் 11.04.2024 வரை: அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை:


தமிழக உள் மாவட்டங்களில் கரூர் பரமத்தி, தருமபுரி   மற்றும்    மதுரை (நகரம்)  ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசியது. தமிழக உள் மாவட்டங்களில் எட்டு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42°  செல்சியஸ் பதிவாகியுள்ளது. 


அதிக பட்ச வெப்பநிலை சேலத்தில் 41.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், மதுரை நகரத்தில் 41.2° செல்சியஸ்,  கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தருமபுரி  மற்றும்   திருச்சியில் 40.7° செல்சியஸ் மற்றும்    நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.


மதுரை விமான நிலையம், திருத்தணி, வேலூர் மற்றும்   தஞ்சாவூர்   ஆகிய இடங்களில் 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.5° செல்சியஸ் (இயல்பை விட +2.2° செல்சியஸ் மிக அதிகம்)  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3° செல்சியஸ் (இயல்பை விட +1.0° செல்சியஸ் அதிகம்)  பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.