சென்னை கே.கே நகர் அழகிரிசாமி சாலையில் முகவரியில் அமைந்துள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 12- ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியராக  ராஜகோபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவர் 12ம் வகுப்பைச் சேர்ந்த  மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட எம்.பி.க்களும், ராமதாஸ் உள்பட அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆசிரியர் ராஜகோபாலனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


வடபழனி காவல் நிலையத்தில் வைத்து ஆசிரியர் ராஜகோபாலனிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரண் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், நங்கநல்லூரில் உள்ள பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் வீட்டில் இருந்து அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை ஆய்வு செய்த போது வாட்ஸ் அப் மெசேஜ்களை அவர் தனது செல்போனில் இருநது நீக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகள், அந்தரங்க புகைப்படங்களையும் செல்போனில் இருந்து நீக்கவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதன் காரணமாக, ராஜகோபாலன் தனது செல்போனில் இருந்து நீக்கிய வாட்ஸ் அப் செய்திகளை சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு மீண்டும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அதனை வைத்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி வந்ததாகவும், மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலமாக Chatting  செய்வது மாணவிகளின் புகைப்படத்தை அனுப்பச்சொல்வது போன்ற அருவருக்கத்த செயலில் ஈடுபட்டதாகவும் ஆசிரியர் ராஜகோபாலனே போலீசாரிடம் விசாரணையில்  ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ராஜகோபாலன் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தன்னைப் போலவே, இந்த பள்ளியில் மேலும் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளித்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


I thank the TN Government and Police for taking swift action by arresting the teacher and investigating the sexual harassment allegations against him. The school management has to be made accountable for their complicity in this by not taking action against the perpetrator. (1/4)


— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 24, 2021


”ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்த போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்த தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நன்றி. மேலும், இந்த புகாரில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்