தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மாநிலம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.


திருவள்ளூரில் அதிக மதுக்கடைகள்:


தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கடந்த மார்ச் மாத இறுதிவரை மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர. சேலம் மற்றும் திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.


அரசு அளித்துள்ள அறிக்கையின்படி, மாநிலத்திலே அதிக மதுபான கடைகள் உள்ள மாவட்டமாக திருவள்ளூர் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் மொத்தம் 355 கடைகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 46 கடைகள் நாளை முதல் இங்கு மூடப்பட உள்ளது. தமிழ்நாட்டை வட தமிழகம், தென் தமிழகம், டெல்டா, கொங்கு என்று நாம் பிரிக்கலாம். இந்த நான்கு மண்டலங்களும் கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் நிறைய மாறுபாடுகளை கொண்டுள்ளது.


வட தமிழகத்தின் பரிதாப நிலை:


கல்வி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் வட தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையிலே நீண்ட காலமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம், வட தமிழகத்தில் கல்வியறிவு குறைவாக இருப்பதும், அங்கு மதுக்குடிப்போர் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதே ஆகும். இத்தனைக்கும் வட தமிழகத்தில்தான் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அமைந்துள்ளது.


மாநில அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, சென்னையில் மட்டும் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளது. தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும், கோயில்களும் நிறைந்துள்ள காஞ்சிபுரத்தில் 255 கடைகள் உள்ளது. மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரத்தில் 220 கடைகள் உள்ளது. மொத்தத்தில் சென்னை மண்டலத்திற்குள் மட்டும் 905 கடைகள் உள்ளது. அதில் தற்போது 138 கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது.


அரசு அளித்துள்ள தகவலின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், அரக்கோணம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய வட தமிழகத்தில் மட்டும் 1742 மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதில், 202 கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது. நிச்சயமாக இந்த மதுக்கடைகள் மூடப்படுவது பல குடும்பங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


தென் தமிழகத்தின் நிலை:


மாநிலத்திலே அதிகளவில் மதுரை மண்டலத்தில்தான் 1345 மதுக்கடைகள் இயங்கி வருகிறது. மதுரை மண்டலம் தென் மாவட்டத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு நாளை முதல் 125 மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இந்த மண்டலத்திற்குட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. அதற்கு ஆண்டுதோறும் வரும் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விதமே சான்று.


மதுக்கடைகள் குறைவாக உள்ள சென்னை மண்டலத்தில்  905 கடைகள்தான் இயங்கி வருகிறது. நாளை முதல் இங்கு 138 கடைகள் மூடப்பட உள்ளது. ஆனால், இங்கு மாணவர்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், குற்ற சம்பவங்கள் அதிகளவில் உள்ளது. இது மறைமுகமாக மதுவால் தென் தமிழகத்தை காட்டிலும், வட தமிழகம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பதை நமக்கு உணர்த்துகிறது.


கல்வியறிவு கடும் பாதிப்பு:


இன்னும் துல்லியமாக சொல்லப்போனால் தென் தமிழகத்தில் மொத்தம் 1851 கடைகள் இயங்கி வந்தாலும் அங்கு கல்வி வளர்ச்சி பெரியளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், வட தமிழகத்தில் இந்த மதுவின் தாக்கத்தால் மாணவர்களின் கல்வியும், அவர்களின் தேர்ச்சி விகிதமும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால், தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூடியது போல இனி வரும் நாட்களிலும் மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், வட தமிழக மக்களின் நலன் மீது அரசு கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.