தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இதனால், மேலே கூறிய 7 மாவட்டங்களில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில இடங்களில் சாலைகள் வழுக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.


விரைவில் வடகிழக்கு பருவமழை:


வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தொடர்ந்து மழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட பன்மடங்கு அதிகளவில் பெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை தொடர்ந்து பரவலாக பெய்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.