நேற்று தமிழ்நாடு முழுமைக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இன்றும் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்கவே இன்று தீவிர கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.


12 மாவட்டங்களில் மழை


கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதே வேளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று (ஆக.03) அமாநிலம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.


அதேபோல், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் இன்று (ஆக.04) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.


அதேபோல் கனமழை காரணமாக வால்பாறை வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கடுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வால்பாறையில், தொடர்ந்து 3ஆவது நாளாக விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரள மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


அதிகரிக்கும் உயிரிழப்பு


கடந்த 31ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மட்டும் கேரளாவில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.