தமிழ் நாட்டில் புதியதாகப் பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக எதிர்கட்சியான அதிமுக பணிக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


 முன்னாள் அமைச்சர்கள் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம்:


அறிக்கையில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் கழக நிர்வாகிகள், கிளை, நகர, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான முறையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். 


அறிக்கையின்படி, வேலூர் மாநகர் மற்றும் புறநகருக்கு கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும்,காஞ்சிபுரத்துக்கு கோகுல இந்திரா, காமராஜ் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனும்,திருப்பத்தூருக்கு கே.ஏ.செங்கோட்டையன், அன்பழகன், கருப்பண்ணன் மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்டோரும். செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு வளர்மதி, தங்கமணி மற்றும் மாஃபா பாண்டியராஜனும், ராணிப்பேட்டை தொகுதிக்கு உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும், திருநெல்வேலிக்கு தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா ஆகியோரும், விழுப்புரத்துக்கு ஓ.எஸ்.மணியன் மற்றும் சி.வி.சண்முகமும்,தென்காசி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், கள்ளக்குறிச்சிக்கு எம்.சி.சம்பத் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: தமிழ்நாட்டில் இன்று 1575 பேருக்குக் கொரோனா: 20 பேர் உயிரிழப்பு!