தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அரசின் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் கொடுக்கவேண்டி உள்ளது என்று தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.



தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை பொழிவு இருந்த காரணத்தால் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலையும் உள்ளது. தனியாரிடம் நெல் விற்பனை செய்தால், அரசின் விலையில் பாதிதான் கிடைக்கிறது என்றார். அதுமட்டுமல்லாமல், நெல் உற்பத்தி அதிரித்துள்ளதால் விவசாயிகள் தங்களின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்றும், லஞ்சம் கொடுக்காமல் எந்த விவசாயியும் நெல்லை விற்க முடியாது என்ற நிலைதான் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்றால், அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும். மற்றும், சீனா, ஜப்பான் போன்று நெல்லில் இருந்து மதுவகைகளை தயாரித்து விற்பனை செய்யவேண்டும். மொலாசஸில் இருந்து மது தயாரிப்பதை கைவிட்டு, அதனை வாகன எரிபொருளாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.



தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு சிதைந்துள்ளது என்றும், உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மீண்டும் வழங்கி, அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் சுயேட்சை சின்னத்தை கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசும்போது, மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சுத்தமான ஜவ்வரிசி வெளிர் மஞ்சள் நிரம் கொண்டது. ஆனால் பெரும்பாலான ஆலைகள் ஜவ்வரிசியை வெண்மையாக்க அதில் மக்களாச்சோள மாவு, சேரன் அரிசி மாவு, சாக்பீஸ் பவுடர், சோடியம் ஹைட்ரோ குளோரைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, சல்பியூரிக் ஆசிட் உள்ளிட்ட ரசாயணங்களை கலக்கின்றனர். இது உடலுக்கு கேடு ஏற்படுத்துவதால் இந்தியா முழுவதும் ஜவ்வரிசி நுகர்வு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஆவதுடன், இதனை தடுக்கவில்லை என்றால் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்றார். மேலும், அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர், கலப்படம் குறித்து போராட்டம் நடத்தினால், அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஜவ்வரிசி ஆலைக்கு சென்று அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கலப்படத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார். இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு நியமித்துள்ள குழுவில் விவசாயிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.