தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில்  மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை  அமைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார். 



அந்த விழாவில் 45மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் 3வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவகல்லூரியில்  தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளில் ஜைக்கா நிறுவனம் சார்பில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்து  முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
  





மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முன்முதலீட்டு பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், மொத்த திட்ட மதிப்பான 1,977 கோடியில் தற்போது 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் 2023ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனவும், இதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டு வரை கட்டிட பணிகள் நடைபெற தொடங்கி பின்னர் 2028ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் எனவும் கூறப்பட்டது.



 

இந்நிலையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் குறித்து ஜைக்கா குழுவினர் மற்றும் மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் வி நாகராஜன் எய்ம்ஸ் இடத்தை பார்வையிட்டு இயக்குனர் டாக்டர் எம் ஹனுமந்த ராவிடம்  எய்ம்ஸ் கட்டுமானம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். எய்ம்ஸ் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.