தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ஆவடி, சேலம், கடலூர், நெல்லை, ஒசூர் மாநகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி ஆணயைர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டிஆர்ஓ துர்கா மூர்த்தி, வணிகவரித் துறை நிர்வாகப்பிரிவு இணை ஆணையராகவும், பெரம்பலூர் ஆட்சியர் கே.கற்பகம், நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலராகவும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் கவிதா ராமு, அருங்காட்சியகங்கள் இயக்குனராகவும், பவர்பின் மேலாண் இயக்குனர் ஆர்.அம்பலவாணன், தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


நிதித்துறை இணை செயலர் எச்.கிருஷ்ணன் உன்னி கருவூல கணக்குத்துறை ஆணையராகவும், திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராகவும், இணை தலைமை தேர்தல் அதிகாரி எச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஒசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொதுத்துறை மரபுப்பிரிவு இணை செயலர் எஸ்.அனு கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும், மாநில விருந்தினர் மாளிகை வரவேற்பு அதிகாரி எஸ்.கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் ஆர்.சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராகவம், கைத்தறித்துறை ஆணையர் கே.விவேகானந்தன் டுபிட்கோ மேலாண் இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த ஹனிஸ் சாப்ரா புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராகவும், பொதுத்துறை கூடுதல் செயலர் ஏ.சிவஞானம் சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனராக இருந்த எஸ்.அமிர்தஜோதி, தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.