எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.