தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  இந்த முழு ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


இன்று காலை 10 மணிக்கு  முதலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இந்த இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.


மருத்துவக் குழுவுடனான ஆலோசனைக்கு பின் சட்டமன்றக் கட்சி உறுப்பினர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். 




இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் எனத்தெரிகிறது. தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்பு தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பு அதிகமிருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்வதால்,பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டிலும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று  சிலர் கூறி வருகின்றனர். மருத்துவ நிபுணர் குழுவும் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே முதல்வரிடம் பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு ஊரடங்கு நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியதாக பதவியேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது.


தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருப்பது  மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளளது.


இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 30 ஆயிரத்து 271 நபர்கள் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 ஆகும் . தொற்று உறுதியானவர்களில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 913 பேர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோர் உள்பட சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 782 ஆகும்.