தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


அதானியைச் சந்தித்தேனா?


அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.மணியும், அவையில் மட்டுமின்றி அக்கட்சியினரும், அக்கட்சியின் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதானியுடன் முதலமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது, அதானியுடன் முதலமைச்சர் சந்தித்துள்ளார் என்று பேசியிருக்கின்றனர். அதையும் இங்கே பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை?  ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது  என்பதால் விட்டுவிட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.


தமிழ்நாட்டில் அதானி குழும முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து விளக்கியுள்ளார்.  அதானி முதலீடுகளை வைத்து தமிழ்நாடு  அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு நான் எழுப்பக்கூடிய கேள்வி என்னவென்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.


நீங்கள் ஆதரப்பீர்களா?


தி.மு.க. மீது குறை சொல்லிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வோ, பா.ம.க.வோ இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க தயாராக இருக்கிறதா? நாங்கள் நாடாளுமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை ஆதரித்து விளக்கிப் பேச நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்பதை நான் கேட்கிறேன்.


இதற்கு நான் விளக்கமே சொல்லவில்லை. உரிய அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அதற்கு விளக்கம் அளித்தார். அவர் இல்லை. அதனால்தான் நான் எழுந்து விளக்கம் சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் பா.ம.க. ஆதரிக்க வேண்டும். அதற்கு பதில் கூறவில்லை நீங்கள். “


இவ்வாறு அவர் பேசினார்.


தமிழ்நாடு அரசுக்கும் அதானி நிறுவனத்திற்கும் மின் கொள்முதல் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாகவும், அதில் முறைகேடு இருப்பதாகவும் கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கால் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்தது.


இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாகவே இல்லை என்று விளக்கம் அளித்தார். ஆனாலும், பா.ஜ.க., பா.ம.க. மற்றும் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது விமர்சித்து வருகின்றனர்.