தமிழ்நாட்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
மாற்றம் பெறும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்
கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (MGNREGA) என்ற பெயரில் 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பலரும் இத்திட்டத்தினால் பலனடைந்தனர். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், அதனை மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி அந்த பெயரை விக்ஷித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்ற பெயரில் மாற்றப்போவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தில் சில மாற்றங்களை செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு, நிதி பகிர்வில் மாற்றம் என பல விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை அதிமுக தரப்பில் எந்த கண்டமும், கருத்தும் முன்வைக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?மூன்று வேளாண் சட்டம், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?, MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!” என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.