மகளிர் சுய உதவிக்குழுவிற்கான திட்டங்கள்
மகளிர் சுய உதவிக் குழுவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள். மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் விற்பனைக் கண்காட்சிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழு- கண்காட்சி
அந்த வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை 18.12.2025 அன்று சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தொடங்கப்படவுள்ளது. நாளை முதல் (18.12.2025) முதல் 04.01.2026 வரை நடைபெறும் .
மகளிர்கள் சொந்தமாக தயாரித்த பொருட்கள்
இந்த கண்காட்சியை துணை முதலமைச்ச் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த மதி கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான நாட்டுச் சர்க்கரை. பனங்கற்கண்டு. பெட்ஷீட்கள், மரச் சிற்பங்கள், பட்டுச் சேலைகள், முந்திரி, மிளகு, ஊறுகாய், கைத்தறி துண்டுகள், தலையணை உறைகள், கண்ணாடி வளையல்கள், மூலிகைப் பொருட்கள், சிறுதானிய பொருட்கள், சிப்ஸ் வகைகள், வெட்டிவேர் பொருட்கள், மண்பாண்டங்கள், மரச்செக்கு எண்ணை வகைகள், மரச் சிற்பங்கள்,
மசாலாப் பொருட்கள். வத்தல், வடகம், உலர் மீன்கள், பருத்தி வேட்டிகள், வாசனைப் பொருட்கள். மூலிகைத் தைலங்கள், பருப்பு வகைகள், சமையல் பொடிகள், செயற்கை ஆபரணங்கள், கைத்தறி துண்டுகள், மூங்கில் மற்றும் மர கைவினைப் பொருட்கள், தேன் நெல்லி, பாரம்பரிய அவல், இரும்புப் பாத்திரங்கள். வீட்டுத் தயாரிப்பு சாக்லேட்டுகள். கேக்குகள், சத்து மாவுகள், ஆயத்த ஆடைகள், கருப்பட்டி, நெய், தேன், பால் கோவா, பருத்தி உள்ளாடைகள், பாரம்பரிய அரிசி வகைகள், நவீன கைப்பைகள், பரிசுப் பொருட்கள். சணல் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்திட 46 அரங்குகளும், கிராமிய பாரம்பரியமும், சுவையும் நிறைந்த உணவு வகைகளை விற்பனை செய்திட 5 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சிக்கு இலவச அனுமதி
நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் வார இறுதி நாட்களில் கலை நிகழ்ச்சிகள், இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இத்தகைய சிறப்புமிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மாநில அளவிலான மாபெரும் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.