முன்னாள் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அண்ணாமலை வந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அதிமுக இரட்டை  தலைமை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள சூழலில் நடைபெற்றுள்ள, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சந்திப்பின்போது, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


 


சர்ச்சையை கிளப்பிய பேனர்:


அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கான பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறாததது, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, இரண்முறை பேனர் மாற்றப்பட்ட பிறகும் கூட, அந்த பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதனால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பு புறக்கணிக்கிறது என்ற சந்தேகம் வலுவடைந்தது.


பிரதமரை சந்தித்த தம்பிதுரை:


இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த நடவடிக்கைக்கு தக்க நேரத்தில் பதில் கொடுக்கப்படும் என கூறினார். அதோடு, நேற்று டெல்லி சென்ற அவர், பாஜகவின் முக்கிய தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேநேரம், நேற்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக விளக்கமளித்தார். இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற அண்ணாமலை - ஈபிஎஸ் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஈபிஎஸ் தரப்பு அதிமுக அணிக்கு பாஜக ஆதரவு அளிக்க வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், ஈபிஎஸ் உடனான சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ்-யும் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.