பா.ஜ.கவிலிருந்து ஐ.டி விங்கை சேர்ந்த 13 நிர்வாகிகள் இன்று விலகியுள்ளனர். தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


அடுத்தடுத்து விலகல்:


தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.  சில மாதங்களுக்கு முன் காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் தகவல் தொழில்நுட்ப (IT Wing) பிரிவின்  தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.


அ.தி.மு.க. - பா.ஜ.க. மோதல்:


இந்நிலையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ”ஒரு கட்சியில் உள்ளவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே. அப்போது தான் மற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.  பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிடக் கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு நான் தோசை இட்லி சுட வரவில்லை, நான் எடுக்கும் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் தலைவர் தான்” என கூறியுள்ளார்.  அதனை தொடர்ந்து பாஜக-அதிமுக இடையே மோதல்  வெடித்தது.


இந்நிலையில் இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.  பாஜக ஐடி விங் மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் 13 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ளவே பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலகிய அனைவரும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.