அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இன்று (அக்டோபர் 15ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் நடத்தும் இந்தத் தேர்வை 2.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 


பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. 2022- 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நடைபெறும் இத்தேர்வில்‌ 1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 சதவீத அளவுக்கு அரசுப்‌ பள்ளி மாணவர்களும்‌, மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.


பாடத்திட்டம் என்ன?


தமிழ்நாடு அரசின்‌ 10-ஆம்‌ வகுப்புத் தர நிலையில்‌ உள்ள தமிழ்‌ பாடத் திட்டங்களின்‌ அடிப்படையில்‌ தேர்வு நடத்தப்படும்‌. இந்தத் தேர்வு கொள்குறி வகையில்‌ அமைந்திருக்க்கும். அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ இந்தத் தேர்வு நடத்தப்படும்‌.




இன்று தேர்வு தொடக்கம்


இத்தேர்விற்கு மாணவர்கள்‌ தாங்கள்‌ பயிலும்‌ பள்ளியின்‌ வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து வந்தனர். குறிப்பாக இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் 22.08.2022 முதல்‌ 09.09.2022 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணத்‌ தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைத்தனர். 


2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம்‌ வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். இவர்களுக்கு முன்னதாக, 01.10.2022 (சனிக்கிழமை) அன்று தேர்வு நடைபெறுவதாக இருந்தது.


எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த நிலையில் தேர்வு இன்று (அக்டோபர் 15ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் நடத்தும் இந்தத் தேர்வை 2.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.