வாழுங் காலத்தின் மாபெரும் தமிழ் மூதறிஞர், நூலாசிரியர், முது முனைவர் க.இளங்குமரனார் நேற்று மதுரையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94. 


இளங்குமரனார் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,


"தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான அய்யா இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை - அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94-ஆவது  அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர். 


இளங்குமரனார் தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். புத்தாயிரம் (20000) ஆண்டு தொடக்கத்தில் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில், அய்யா இளங்குமரனார் அவர்கள் பங்கேற்று உரையாற்றியது தளிச்சிறப்பாகும். 






வடமொழி பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன், சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும் - தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் அய்யா இளங்குமரனார்.


அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலன் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து நலவாழ்வு வாழ்ந்து, அவற்றை இன்றைய இளைஞர்களும் பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தவர். இளங்குமரனாரின்  உடை போலவே அவரது உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. அய்யா இளங்குமரனாரினன் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல் என்றென்றும் நிலைத்திருக்கும் அய்யா  இளங்குமரனாரினன் இறவாப் புகழ் " என்று தெரிவித்தார்.   




 


செந்தமிழந்தணர், என் ஆசான் திருமிகு இரா.இளங்குமரனார் முதுமையால் மதுரையில் மறைந்தார் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  


இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,


"இளம்வயதிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொடங்கி, தானே பயின்று புலவர் பட்டம் பெற்று, உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றிய செம்மல் அவர். பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார்.






திருநகரில் பாவாணர் நூலகத்தையும் திருச்சிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலையையும் அமைத்தவர். அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர்,  கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைபடக்கூடாது என்பதற்காக கண்களை மூடியெழுதிப் பழகியவர். திருக்குறளுக்கு உரையை திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசன். குறள்வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் முதன்முதலாகப் பெண்ணொருத்தியால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை - அது மறைந்துவிட்டது என்று தமிழறிவுலகம் கருதியவேளையில் - கண்டெடுத்து தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய தமிழ்ப்பாட்டனார் எங்கள் இளங்குமரனார். என அவரைப்பற்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் விண்மீன்களாய் மனவானில் ஒளிவிடுகின்றன. அவரது இழப்பை மனம் ஏற்கமறுக்கிறது. ஆனால், இயற்கையின் கட்டளையை ஏற்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.