தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் மழை குறையும் என்றும் வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  08.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

09.04.2023 மற்றும் 10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

11.04.2023 மற்றும் 12.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதிகபட்ச வெப்பநிலை:

08.04.2023 மற்றும் 09.04.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  கருப்பாநதி அணை (தென்காசி) 2, மயிலாடி (கன்னியாகுமரி), கன்னியாகுமரி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும் வரும் நாட்களில் 2-3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸும், திருப்பத்தூரில் 36 டிகிரி செல்சியஸும், சென்னையில் 34 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.