சென்னையில் இன்று அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது முதலே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 41 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனமப்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் – 40.1 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் – 40.6 டிகிரி செல்சியஸ், கடலூரில் – 39 டிகிரி செல்சியஸ், கரூரில் – 39 டிகிரி செல்சியஸ், நாகையில் – 38.9 டிகிரி செல்சியஸ், திருச்சி – 38.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 38.2 டிகிரி செல்சியஸ், மதுரை – 38.6 டிகிரி செல்சியஸ், ஈரோடில் – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த சுழலில் இன்றும் சென்னையில் 42 டிகிரி கடந்து வெப்பநிலை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

05.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.