இந்தியப் பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக மாறி இன்னும் மூன்று நாள்களில் முழுவதுமாக நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், முன்னதாக தனியார் வானிலை நிபுணர் வெதர் மேன் பிரதீப் ஜான் தனது பதிவில், MJO என்று அழைக்கப்படும் Maddan Julian Oscillation காரணமாக இந்த அரிதான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகப் போவதாகவும் இதனால் ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்றும், இலங்கையில் அதி கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.


மேலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வங்காள விரிகுடாவில் உள்ளதாகவும் இதனால் ஈரப்பதமான காற்று சென்னைக்குத் தள்ளப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் லேசான மழையும், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 






மேலும் இலங்கையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தெற்கு நோக்கி நகரக் கூடும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 28.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.


29.01.2023: வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு  இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.


காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 31.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01.02.2023 இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்   


இதன் காரணமாக 30.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு  இடங்களில்   லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.


31.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.


01.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை


28.01.2023:¬ தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்,   பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


29.01.2023: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  


30.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  


31.01.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.