தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. சென்னையில் பகலில் வெய்யில் இருந்தால் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று சென்னை நகர் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

வானிலை - இன்றைய நிலவரம்:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை,11,) ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை (ஜூலை,12), நாளை மறுநாள் (ஜூலை,13, 1014) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

14.07.2024 முதல் 17.07.2024 வரை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 - 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

11.07.2024 15.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.