தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த இந்த ஊரடங்கில் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய கொரோனா சூழலுக்கேற்பட ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


பள்ளிகள் திறப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23 முதல் அதாவது நாளை மறுநாள் முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,


"தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21:08.2021) தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய்த் தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.  மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள கோவிட்- 19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09 2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 


நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23-8-2021 முதல் திரையாரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள்       உறுதி செய்தி கொள்ள வேண்டும்.



கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். 


அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . 


மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று பரவல் நம் மாநிலத்தில் இல்லாத நிலையை உருவாக்க உதவிட வேண்டும்" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.