பிரதமர் மோடி தலமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியம் அளித்து வருகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் விழா நடைபெற்றது.


இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். மேலும் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா ஏற்றுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா “பிரதமர் மோடி தலமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியம் அளித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 


தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.


அமித்ஷாவின் இத்தகைய பேச்சை கேட்டு மத்திய இணை அமைச்சர் உற்சாகமாக கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


முன்னதாக, மாநில மொழிகளுக்கு, தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழில் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.