TN Headlines Today: 



  • பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படும்.. இன்று முதல் அமல்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!


தமிழகம் முழுவதும் இருக்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிகப்படியான விவசாயிகள் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..



  • ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?


வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய (ஜூன் 1ஆம் தேதி ) நிலவரப்படி ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக சிலிண்டர் விலை உள்ளது. 


எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது..?


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.


குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநில தேர்தல் எதிரொலியாக 2வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. மேலும் வாசிக்க..



  • ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு - நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ம.தி.மு.க உட்கட்சி தேர்தலில் பொதுச்செயலாளராக உள்ள வைகோ மீண்டும் அப்பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார்.


பொதுச்செயலாளர் வைகோ:


ம.தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று நடைபெற்றது.


இதனிடையே  சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடுவதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரி தாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.மேலும் வாசிக்க..



  • மேகதாது அணை கட்டுவேன் என்ற கர்நாடக அமைச்சரின் அறிவிப்பு சட்ட விரோதமானது - பி.ஆர்.பாண்டியன்


மேகதாது அணை கட்டுவேன் என்ற கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவக்குமாரின் அறிவிப்பு சட்ட விரோதமானது என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்  பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கிற நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் வி.எம். சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்கான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானதாகும். மேலும் வாசிக்க..

 

வானிலை அறிவிப்பு:

 

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க..


SouthWest Monsoon: தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்..? தமிழ்நாட்டிற்கு பயன் உண்டா..?


தென் மேற்கு பருவ மழை: 


தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.  இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழை தான். இதனால் பல மாநிலங்கள் வளம் பெருகிறது.


தென்மேற்கு பருவ மழை முதலில் கேரளா மாநிலத்தில் தான் தொடங்கும். கடந்த ஆண்டு சராசரி அளவு மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை விட சற்று குறைவாக பதிவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ நிகழ்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இது  போன்ற சூழலில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க..