மதச்சார்பின்மை என்பது வெளிநாட்டு கான்செப்ட் என்றும் குறிப்பிட்ட சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் பயன்படுத்தப்பட்டது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திருவள்ளுவர், சாதி, மகாத்மா காந்தி, வள்ளலார் என பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய கருத்துகளுக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 

ஆளுநர் ரவி சர்ச்சை கருத்து:

 

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற ஹிந்து தர்ம வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக்கால நிலை அமல்படுத்தப்பட்டபோது, சில சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது.

 

நாடாளுமன்ற விவாதத்தின்போது அதை அறிமுகப்படுத்தியவர்கூடச் சொன்னார், நம் நாட்டில் உள்ள செக்குலரிசம் என்பது ஐரோப்பாவில் உள்ள செக்குலரிசம் அல்ல. ஐரோப்பிய செக்குலரிசம் என்பது ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கும், அங்குள்ள மதம் சார்ந்தவர்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்கும் விதமாகக் கொண்டுவரப்பட்டது.

 

மதச்சார்பின்மை என்றால் என்ன?

 

உன்னுடைய பங்கை நீ வைத்துக்கொள், என்னுடைய பங்கை நான் வைத்துக்கொள்கிறேன் என்பதுதான் ஐரோப்பிய நாட்டு செக்குலரிசம். அதை நம் நாட்டில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னார்கள். நமது நாடு தர்மத்தின் அடிப்படையிலான நாடு. தர்மத்தின் அடிப்படையில் அனைவரும் சமம். சர்வ மத சமத்துவம்தான் உண்மையான மதச்சார்பின்மை" என்றார்.

 

எக்ஸ் தளத்தில் பின்னர் குறிப்பிடுகையில், "பாரதத்தின் பரிணாம வளர்ச்சியை மனிதநேய மதிப்புகளின் முதுகெலும்பாகவும், பிரதமர் மோடியின் தொலைநோக்கு மற்றும் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் பாரதம் நமது கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தில் எவ்வாறு மீண்டும் பெருமிதத்துடன் பரிணாம வளர்ச்சியடைகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

 

கடந்த ஒரு தசாப்தத்தில் நமது ஏழை மற்றும் அடித்தட்டு நடுத்தர மக்களின் வாழ்வை ஒரு விரிவான வளர்ச்சி மற்றும் மேம்பாடு சீராக முன்னேற்றி வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரத கட்டமைப்பில் மாணவர்கள் தங்கள் முழு தனிப்பட்ட வளர்ச்சியுடன் தங்கள் பங்களிப்பை பதிக்க வேண்டும் என்றும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.