பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுத்தானது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் ரூ. 1891 கோடி முதலீடு செய்யப்படும் என்றார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா பெருவயல் கிராமத்தில் மிட்சுபிஷி நிறுவனத்தின் தொழிற்சாலை அமையவுள்ளது. 100% அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஏசி மற்றும் கம்ப்ரசர் உற்பத்திக்கான ஆலையை மிட்சுபிஷி நிறுவனம் அமைக்கும். 2029க்குள் 2004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். 52.4 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி ஆலை அமையவுள்ளது. 


இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


 


”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீட்டில், 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்  குளிர்சாதன இயந்திரங்கள்  மற்றும் காற்றழுத்தக் கருவிகள்  உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை.


மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்-னுடைய புரிந்துணர்வு ஒப்பந்த விழாவிலே பங்கேற்றிருக்கக்கூடிய மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களே, 


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களே, 


வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.வே. விஷ்ணு, இ.ஆ.ப., அவர்களே, 


ஜப்பான் துணைத் தூதர் திரு.டாகா மசாயுகி அவர்களே,


மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் குழுமத் தலைவர் திரு.யாசுமிச்சி தாசுனோகி அவர்களே, 


மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிர்வாக இயக்குநர் திரு.கசுஹிகோ தமுரா அவர்களே, 


மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் உயர் அலுவலர்களே,


அரசு உயர் அலுவலர்களே, 


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, 


உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.


கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்துப் பார்த்தால், தொழில் துறை நிகழ்ச்சிகள்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களையும், அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?" என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். 
2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில், மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. 
மின்னணுவியல் துறையில்,  உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல்,  அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
உங்களது இந்தத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில், 1,891 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 
2 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த உற்பத்தியில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கடந்த ஜூலை 2022-இல் 'தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை' என்னால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், ஏற்கனவே உள்ள தங்கள் மையங்களை விரிவுபடுத்தியுள்ளன. இதன்மூலம், 1 லட்சத்து 
22 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது மிக மிக கவனிக்கத்தக்கது! நீங்கள் இந்த நிறுவனத்தை அமைப்பதன் மூலமாக பல துணை நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு ஏற்படும். இறக்குமதியானது குறையும்”.