மிக்ஜாம் புயல்


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் ஸ்தம்பித்து போனது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.


இதனால் படகுகள், லாரிகள், மினி லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அதிலும், பல படகுகள் மழையால் சேதம் அடைந்ததால் உணவு பொருட்கள் வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும், படகுகள், வலைகள் போன்றவைகள் சேதமடைந்ததால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சேதமடைந்த படகுகள், வலைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை அறிவித்திருக்கிறது. 


கட்டுமரங்கள் முதல் இயந்திர படகுகள் வரை:


அதன்படி, மழையால் சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும்.


அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும். அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  


யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு?


இதே போன்று, மிக்ஜாம் புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணமும், மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000  என்றிருந்ததை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக என்றிருந்ததை, ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும். 


 மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து. ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிவாரண தொகை எப்படி பெறுவது?


மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண தொகையினை குடியிருக்கும் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், யார் யாருக்கு கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக  வேலைக்காக சொந்த ஊர்களில் இருந்து சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பர்கள் தான் அதிகம். எனவே, சென்னையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கிடைக்குமா? என்பது பற்றி  அரசு சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னையில் உள்ள 16 தாலுக்காக்களிலும் மழை பாதிப்பு  இருப்பதால் அனைவருக்கும் நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.