தமிழ்நாடு முழுவதும் மின்கட்டணம் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் உயர்வதாக பரவும் தகவல் உண்மையில்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசு..? 


தமிழ்நாட்டில் மின் விநியோகம் செய்வது முதல் மின் தடை, மின் தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களே முடிவு எடுத்து, செயல்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே மின்சார தொடர்பான நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தது. 


இந்நிலையில், இந்த இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் மின்கட்டண உயர்வு அமலுக்கு வாய்ப்பு உள்ளதாக செய்திகளிலும், சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. 






இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்கட்டணம் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் உயர்வதாக பரவும் தகவல் உண்மையில்லை, அது வதந்தியே என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 


தவறான செய்தி:


சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது. 


உண்மை என்ன..? 


மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே.. இது கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்” என பதிவிட்டுள்ளது.