வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டிலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கபபடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளது.


அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் எதிர்பாராவிதமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசு தொலைக்காட்சி தலைமையகத்த்துக்கு தீ வைத்ததால் போராட்டம் தீவிரமடைந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 


அந்நாட்டிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். 


தமிழ் மாணவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி:


வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில், தமிழ் மாணவர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை, வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.


இந்தியாவிற்குள் - +911800, 309 3793


வெளிநாடு +91 80 6900 9900


தொடர்புக்கு +91 80 6900 9901