முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேர் மீதான குட்கா முறைகேடு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த குடோன் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. 


இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக டிஜிபி ராஜேந்திரன் பதவியிலிருந்த போது அவரிடம் சிபிஐ வீட்டில் சென்று விசாரணை நடத்தியது. 






இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு சிபிஐ எழுதிய கடிதத்தில், குட்கா முறைகேடு வழக்கு சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளதால், அதன் முக்கியத்துவத்தை கருதி தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.


மேலும் மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால்  முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ்,  குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்ககோரி கேட்டுக்கொள்ளப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேருக்கும் சிபிஐக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண