தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடைகாலத்தில் மின் தேவையை பூர்த்திசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 


மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி  தலைமையில்  கோடை காலத்தில் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், லக்கானி, மேலாண்மை இயக்குநர் ரா.மணிவண்ணன், அனைத்து இயக்குநர்கள், தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தினார்.


அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் சரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.


மின் உற்பத்தி விவரம் 


நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 17,584 மெகாவாட்டாக 04.03.2023 அன்று பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் 29.04.2022 அன்று பதிவான 17.563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொண்டது வரக்கூடிய நாட்களில் மின்நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு 24x7 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தினை வழங்குவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது 


தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16.500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17.000 மெகாவாட்டிலிருந்து 18.100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம். வருகின்ற மே மாதத்தில் 17.400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17.196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18.100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2022-ல் 17,563 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு ஏப்ரல் 2023-ல் 18.500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கடந்த மே 2022-ல் 16,750 மெகாவாட்டாக இருந்த மின் பயன்பாடு மே 2023-ல் 18,000 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மின்தேவை அதிகரிப்பு:


கோடைகால உச்சபட்ச மின்தேவையான 18,500 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள். மாநில மற்றும் ஒன்றிய தொகுப்புகளின் மூலம் 8,959 மெகாவாட்டும், தமிழ்நாட்டிலுள்ள காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,750 மெகாவாட்டும், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் தினசரி 2,752 மெகாவாட்டும். மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் 650 மெகாவாட்டும்.


கோடை காலத்தில் மின் கொள்முதல் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12 முதல் ரூ.20 வரை இருந்ததை கருத்தில் கொண்டு மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறுகியகால ஒப்பந்தப்புள்ளி மூலம் இந்த ஆண்டு 1.562 மெகாவாட் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு ரூ8.50 என்ற விலையில் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.1,312 கோடி சேமிப்பு கிடைக்கும்.


தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை :


தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் 5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த நிலக்கரியின் கையிருப்பு அளவு 1,82,555 மெட்ரிக் டன் மட்டுமே. இது சென்ற ஆண்டை விட. 6.16,569 மெட்ரிக் டன் கூடுதலாகும்.


கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நிலக்கரியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக மார்ச் 2023-ல் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியினை முடிக்கப்பட்டுள்ளன. 


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு


266.87 இலட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள். இன்னும் 67,275 மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தமுள்ள 267.55 இலட்சம் மின் நுகர்வோர்களில் ஆதார் இணைக்கப்பட்ட சதவீதம் 99.75 சதவீதம் ஆகும்.