சனாதன தர்மம் குறித்து பேசி நாட்டை திரும்பி பார்க்க வைத்தவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி. சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தை முன்வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பொதுக்கூட்டம் ஒன்றில் உதயநிதியை மறைமுகமாக சாடினார்.


காலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட உதயநிதி புகைப்படம்: இந்த சூழலில், ஆந்திராவில் உள்ள கோயில் ஒன்றில் கால்களை சுத்தம் செய்வதற்காக உதயநிதியின் படம் பொறித்த மேட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.


இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றுவதை, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி கேட்டு கொண்டுள்ளார்.


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் பதிவிடுகையில்,  "என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது.


கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.


"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது"


பெரியார் மீது செருப்புகளை வீசினர். அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். கருணாநிதி மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர்.


தற்போதைய திமுக தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.


 






என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கருணாநிதி - திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.