தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1964 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 243 பேரும், கோயம்பத்தூரில் 229 பேரும்,,ஈரோடில் 164 பேரும், செங்கல்பட்டில் 140 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 


கடந்த சில நாட்களாக குறைந்து வந்த மாநிலத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும்  அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாட்களுக்குப் பிறகு, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.          


குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1917 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,26,317 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.87% குணமடைந்துள்ளனர்.   


இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,396 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8345 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது.    


சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,382 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.3 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. 


கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தின் தொற்று உறுதி விகிதம் 2.3 ஆக அதிகரித்துள்ளது. 0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம் , தற்போது 0.8 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்க கூடிய வகையில் உள்ளது. 



     


கொரோனா பரிசோதனை: கடந்த 24 மணி நேரத்தில், 1,67,792 (நேற்று - 1,60,229 , அதற்கு ஒருநாள் முன்னதாக - 1,65,325 ) கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 3  (3,91,65,748) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறித்தியுள்ளது. தொற்று விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து காணப்படுவதன்  மூலம் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. இந்த தொற்று உறுதி விகிதம், மூன்றாவது அலையை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   


இரண்டாவது அலை ஓயவில்லை:  நாட்டில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை முற்றிலுமாக குறையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்தார்.