பல தலைமுறையாக காட்டுப் பகுதிகளை

  வாழ்விடமாக கொண்ட  வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்த பழங்குடி இருளர் மக்கள் , வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஊரோரங்கில் குடிசை அமைத்து , பாம்பு எலி பிடிக்கும் வேளைகளில் ஈடுப்பட்டனர் .  இதில் போதிய வருமானம் பற்றாததால் , இன்று வரை பல பழங்குடி இருளர்கள்  கொத்தடிமைகளாக செங்கல் சூளை , ரைஸ் மில் ,  மரம் வெட்டும் தொழில் , ஆடு மாடு மேய்த்தல் மற்றும் விவசாய நிலங்களில் இரவு காவலர்களாக பயன்படுத்தப்படுகின்றனர் .    




தமிழ்நாட்டில் மொத்தம் 427  இன பிரிவு மக்கள் விழுவதாக ஒரு கணக்கெடுப்பு உள்ளது .    இதில் இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் 36  பிரிவுகளாகவும் , தாழ்த்தப்பட்டோர் 76 பிரிவுகளாகவும் உள்ளனர் . 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ,  தமிழ் நாட்டில் பழங்குடி இருளர் இன மக்கள் மொத்தம் 1 , 89 , 661 பேர் வாழ்ந்து வருகின்றனர் .   


இதில் 10  சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்  , சாதி சான்று , குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்றிதழ்கள் இல்லாமல் தங்குவதற்கு சொந்த வீடுகள் இன்றி , ஆற்றங்கரை ஓரம் , ஊர்களை ஒட்டிய காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்று வரை பல்வேறு சாதி ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 



 


திண்டிவனம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் முருகப்பன் ராமசாமியை தொடர்புகொண்டபோது “கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சென்ற ஆண்டு முதல்  உலகின் பொருளாதாரம் தொடங்கி , மனித உயிர் இழப்புக்கள் வரை பல்வேறு பாதிப்புகள் அடைந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் கல்வியிலும் , பொருளாதாரத்திலும்  மிகவும்  பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பழங்குடி இருளர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்து உள்ளனர் .    குடும்ப அட்டை இல்லாத காரணத்தால்  தமிழக அரசு அறிவித்துள்ள 4000  கொரோனா உதவி தொகை மற்றும் வேறு பல சலுகைகள் முழுமையாக தங்களுக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர் பழங்குடி இருளர் மக்கள். இந்த சமயத்தில் இவர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைத்தால் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்,’’ என்று கூறினார்   






    ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த   சங்கர்(50) என்ற பழங்குடி இருளரிடம் பேசிய போது , ‛‛ எனக்கு திருமணமாகி ரேவதி (45)  என்ற மனைவியும் , 9  பிள்ளைகளும் உள்ளனர் . என்னை போன்ற இன்னும் 4  இருளர் குடும்பங்கள் திண்டிவனம் - மேல்மருவத்தூர் நடுவே அமைந்திருக்கும் ஒலக்கூர் கிராம ஏறி கரை ஓரம் கோட்டை அமைத்து தங்கி வருகிறோம் . தின கூலிகளாக நங்கள் , மரம் வெட்டும் தொழில் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வருகிறோம் .  சென்ற ஆண்டு கொரோனா  தொடங்கிய  காலம் முதல் ,  வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் வறுமையில் வாழ்கின்றனர் .  எங்கள் எல்லோருடைய நிலைமையும் இதுதான்.




ங்களை போல அதிக இருளர் இன மக்கள் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்று இல்லாததால் , அரசு வழங்கும் இலவச அரிசி கூட பெற முடியாமல் , பட்டினியில் வாழ்ந்து வருகின்றோம் . எனவே இந்த இக்கட்டான நேரத்தில் அரசு எங்களுக்கு தகுந்த உதவி செய்ய வேண்டும்,’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார் .   


பழங்குடி இருளர் மக்களுக்கு கடந்த 30  ஆண்டுகளாக பணியாற்றி வரும்  பேராசிரியர் பிரபா கல்விமணியை தொடர்பு கொண்ட போது, ‛‛கல்வியிலும் , வேலைவாய்ப்பிலும்  மிகவும் பின்தங்கி இருக்கும் பழங்குடி இருளர் மக்கள் , சமீப காலங்களில்  தான் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவியாலும் கொத்தடிமை முறையில் இருந்து மீண்டு வருகின்றனர் . பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் சாதி சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை , இதனால் அவர்கள் குழந்தைகள் கல்வி முற்றிலும் கேள்விக்குறி ஆகியுள்ளது .   மேலும்  குடும்ப அட்டை மையமாக கொண்டு அரசு வழங்கும் சலுகைகளில் இவர்களுக்கு சில தளர்வுகள் ஏற்படுத்தி , கிராம நிர்வாக அலுவலர் , பஞ்சாயத்து உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் கொண்டு  கணக்கிட்டு உரிய விவரங்களை முழுமையாக கொண்டு சேர்க்க முடியும்,’’ என்றார். 






மக்கள் சிரமங்களை தவிர்க்க தான் அரசு நிதி உதவியளிக்கிறது. அவ்வாறு அளிக்கப்படும் நிதியை பெற முழு தகுதியிருந்தும், ரேஷன் கார்டு இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக இருளர்களுக்கு நிவாரணம் மறுக்கப்படக்கூடாது. தினக்கூலியில் துவங்கி லட்சங்கள் மாத ஊதியம் பெறுபவர் வரை ஊரடங்கு ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிடைப்பதை செய்து பசியாறி வரும் இவர்களை போன்றோருக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. 


தங்குவதற்கு சரியான வீடில்லை, நடக்க நல்ல சாலையில்லை, உடுத்த உரிய உடையில்லை, மின்சாரம் இல்லை, வசதியில்லை, நீரில்லை என பல இல்லைகள் இவர்களிடமிருந்தாலும், வாழ உயிர் இருக்கிறது. அதை காப்பாற்ற அரசு இருக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.




எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் வாழும் இந்த இருளர் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு தான் கிடைக்கவில்லை; அட்லீஸ் நிவாரணமாவது கொடுக்கலாமே. பச்சை குழந்தைகளுடன் உணவுக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு, இன்னும் மறுக்கப்பட்டு வரும் பல்வேறு நீதிகளில் இந்த நிவாரணமும் சேர்ந்து விட வேண்டாம். கடந்த ஓராண்டாகவே கடும் சிரமத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் மனநிலைக்கு ஓரளவு நிம்மதி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.