தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 652 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தை கட்ந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 526 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 53 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 789 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 863 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 428-ஆக இருக்கிறது.