இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். 


இளையராஜாவின் மகள் மரணம்:


பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இன்று மாலை 5.30 மணிக்கு அவர் காலமானதாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது. நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட உள்ளது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார். 


பவதாரிணியின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:


இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.


தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார்.
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில்  வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலும் இவரின் புகழை பட்டித் தொட்டி எங்கும் எடுத்து சென்றது.


இதையும் படிக்க: Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்