’ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வீடியோவுடன் அத்திட்டம் உருவான கதையையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 


’ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டம்


கடந்தாண்டு மே-7 ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண்.110 -ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ‘ 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மருத்துவ உதவி  தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.’ என்று அறிவித்திருந்தார். கடந்த ஓராண்டாக இத்திட்டன் கீழ் பல்வேறு பயனாளிகள் நன்மை அடைந்துள்ளனர்.






திட்டம் உருவான கதை..


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இத்திட்டதின் சாதனைகள் பற்றி உள்ளது. அதோடு, “பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான்.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் பற்றி விடீயோவில் உள்ள விவரம்



  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 9.30 லட்சம் குழந்தைகள் ஆக கண்டறியப்பட்டுள்ளது.

  • ஊட்டச்சத்தை உறுதிசெய் - 92,015 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு அளிக்கப்பட்டது. 

  • ரூ.8.68 கோடி செலவில் தாய்மார்களுக்கு சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள 10 லட்சம் குழந்தைகள் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

  • 1,06,916 கடுமையான ஊட்டச்சத்து குறையாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து சேவை வழங்கப்பட்டது.

  • 74,615 (70%) குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நிலையிலிருந்து முன்னேறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டம் செயல்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் பயன்பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.