சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்திருப்பது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்திய தண்டனை  சட்டம் உள்பட மூன்று சட்டங்களின் பெயர் மாற்றம்:


இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றியும், பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் வழிவகை செய்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக்  சுரக் ஷ சங்ஹீத மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக் ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.


"இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சீரழிக்கும்  முயற்சி"


ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு, இந்தியில் பெயர் வைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய மசோதாக்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சீரழிக்கும் மத்திய பாஜக அரசின் துணிச்சலான முயற்சி. மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம்.


இது, இந்திய ஒற்றுமைக்கான அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல், தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை. வரலாற்று ரீதியாக, இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான முன்னணிப் படைகளாக தமிழ்நாடும் திமுகவும் உருவெடுத்துள்ளன.


"எதிர்ப்பு தீ மீண்டும் பற்றி எரிகிறது"


இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் வரையில், அதை செய்துள்ளோம். இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம். மீண்டும், தளராத உறுதியுடன் அதைச் செய்வோம். இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு தீ மீண்டும் பற்றி எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1860 முதல் 2023 வரை நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது.  ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 


3 மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்த மூன்று சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும். புதிய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90%க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.


அதனால் தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள, அனைத்து வழக்குகளிலும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹீதா மூலம், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.