சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் முன்னாள் நீதிபதி முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் அகாடமியை உருவாக்கியுள்ளனர். இதில் நடிகர் சூர்யாவின் பங்களிப்பை குறிப்பிட்டு” ஏழை, எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.




சத்யதேவ் அகாடமி


முன்னாள் நீதிபதி முன்னெடுப்பில், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக இந்த அகாடமியை உருவாக்கியுள்ளனர். இதன் இலட்ச்சினையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள் / சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு "யூ-டியூப்" வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


சத்யதேவ் அகாடமியை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பாராட்டுளைத் தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டர் பதில், “சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சதய்தேவ் அகாடமி (SathyadevLawAcademy)-யைத் தொடங்கி வைத்தேன். 




இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா (Suriya_offl) அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.


சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.


நீதியரசர் சந்துரு அவர்களோடு,  ஜெய்பீம் (JaiBhim) திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.


’நான் முதல்வன்’ திட்டம்


 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,”  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி, பல்கலைக்கழக பாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவித்து, அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “நான் முதல்வன்” திட்டம் செயல்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 453 பொறியியல் கல்லூரிகளில் 4,72,972 மாணவர்களும், 861 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,51,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் ஆண்டு நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு- Simens, Dassault, Microsoft, IBM, Cisco Autodesk L&T, TCS, Infosys, NSE போன்ற நிறுவனங்கள் மூலமாக ARVR, Artificial Intelligence, Machine Learning, Full Stack, Data Analytics, Electric Vehicle Design, Cyber Security, Mutual Funds, Capital Markets, Fintech, Block Chain, Digital Marketing மேலும் இது போன்ற 70க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மானாவர்களுக்கு நிறுவனங்கள் மூலமாக, திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 இலட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு முழுவதும் "நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 65,034 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 83,223 கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாணவர்களும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.” என்று தெரிவித்தார்.


 சட்டம் பயிலும் மாணவர்களுக்கு “நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க "சத்தியதேவ் லா அகாடமி" நிர்வாகிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேல் பொய்யாமொழி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் கதன், அகாடமியின் இயக்குநர் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு,  ஓய்வு பெற்ற நீதியரசர் கே. பி சிவசுப்பிரமணியன், நடிகர் திரு.சூர்யா, 2D நிறுவன முதன்மை செயல் அலுவலர்  இராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், திரைப்பட இயக்குநர்  த.செ. ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.