மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த  ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறைம் வருவாய்த்துறை, சமூகநலத்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


ஆலோசனைக் கூட்டம்:


மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


தமிழக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் 1 கோடி பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 


இந்த கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், தகுதி வாய்ந்த மகளிரை தேர்ந்தெடுப்பது, வழிமுறைகளை நிர்ணிப்பது, அரசாணை வெளியிடுவது முன்னிட்டு பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.