பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த விவகாரம்: தமிழக பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது

தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் காவல்துறையினரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா கோயிலுக்குள் முறைகேடாக நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு இந்த மாதம் 11ம் தேதி சென்ற தமிழக பாஜக துணைத் தலைவர் சென்றபோது, கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நேற்று இரவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தினை மீறும் செயலைச் செய்ததிற்காகவும், அதனை முன்னின்று செய்ததிற்காகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், இன்று, திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றொரு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது. 

தேர்வறையில் இருந்த பேராசிரியர் மாணவர்களின் ஹால் டிக்கெட் போன்றவற்றை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரை தனி அறையில் அமர வைத்து விசாரித்த போது அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் 29 வயதான திவாகரன் என்பதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு வருட உடற்கல்வி ஆசிரியர் படிப்பை படித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும் திவாகரன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த 48 வயதான பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும் தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு  செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தேர்வு மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் தேர்வு எழுதிய திவாகரன் மற்றும் பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை தாலுகா காவல்துறையினர் கைது  செய்தனர். மேலும்  இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தனது சமூக வலைதள பக்கங்களில் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இளங்கலை பட்டப்படிப்பிற்கான தேர்வு ஒன்றை எனது பெயரில் எழுதிய நபர்க்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனது அரசியல் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையாக எனது பெயரில் யாரோ ஒருவர் குறிப்பிட்ட தேர்வு எழுதியதாக எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்திகள் வெளி வருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் திருவாரூர் மடப்புரத்தில் உள்ள பாஜக பிரமுகர் வாசன் நாகராஜன் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் பாஸ்கர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக துணைத் தலைவர் மற்றும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola