"திமுக வெற்றிக்கு அதிமுக பிளவே காரணம்.. 2026இல் அந்த நிலை இருக்காது" தமிழக பாஜக பரபர அறிக்கை!

திமுக கூட்டணி தேர்தலில் வென்று வருவதற்கு அதிமுகவின் பிளவும் நிலையற்ற தன்மையுமே காரணம் அந்த நிலை 2026இல் கண்டிப்பாக இருக்காது என தமிழக பாஜக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவால் மட்டுமே திமுக கூட்டணி தேர்தலில் வென்று வருவதாகவும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிலை கண்டிப்பாக இருக்காது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் திமுக நடத்தும் சடங்குதான் இது.

ஒவ்வொரு செயற்குழுவைப் போல, இந்த செயற்குழுவும், முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை புகழ் பாடும் கூட்டமாகவே நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம்" என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "200 இடங்களுக்கு மேல் வெல்வோம்" என்றும் கூறியிருக்கிறார்.

இவர்கள் திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். திமுக என்ற கட்சி கருணாநிதியின் குடும்ப பிடிக்குள் வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றதில்லை. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருக்கும்போதும், எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்காத போதும் மட்டுமே திமுக தேர்தலில் வென்றிருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும், நிலையற்ற தன்மையினாலும் மட்டுமே திமுக கூட்டணி தேர்தலில் வென்று வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிலை கண்டிப்பாக இருக்காது.

திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமையப்போவது உறுதி. எனவே "ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம், 200 இடங்களுக்கு மேல் வெல்வோம்" என்று "தந்தையும், மகனும்" பகல் கனவு காண வேண்டாம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பொதுமக்கள் மீது சுமைகளை திமுக அரசு ஏற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சியின் போது இப்படித்தான், அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று திமுகவினர் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. அந்த நிலைதான் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஏற்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

திமுக செயற்குழுவில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம், மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு கண்டனம், விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு என மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட செயற்குழு, பாஜகவுக்கு எதிரான செயற்குழுவாக நடந்து முடிந்திருக்கிறது. இதன் மூலம் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை திமுக மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களம்,  'திமுக எதிர் பாஜக' என்று மாறிவிட்டதை பிரதிபலிக்கும் விதமாகவே திமுக செயற்குழுவில் பேசியவர்களின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க திமுக முயற்சித்து வருவதையே திமுக செயற்குழு தீர்மானங்கள் காட்டுகின்றன. பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் விதைத்து விட்டால் வென்று விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.

இனி அது நடக்கப் போவதில்லை  வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்  2011 தேர்தலைப் போல திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்படும்  அந்த அளவுக்கு தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பலை வீசுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

 

Continues below advertisement