அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தற்போதே தொடங்கிவிட்டன. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்நாடு, பாஜகவின் முக்கிய டார்கெட்களில் ஒன்றாக உள்ளது. 


பாஜகவின் டார்கெட் தமிழ்நாடு:


ஏன்? என்றால் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அதை தென் மாநிலங்களில் பெறும் வெற்றியை கொண்டு சரி செய்ய திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு சமீப காலமாக சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வருகிறது.  


சறுக்கலை சந்தித்து வரும் தமிழ்நாடு பாஜக:


தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


இதையடுத்து, தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (IT Wing) பிரிவின்  தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 


தொடர் வெளியேற்றம்:


மேலும் பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பாஜக ஐடி விங் மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் 13 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். 


துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ளவே பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலகிய அனைவரும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் விலகிய அனைவரும் பாஜக மாநில தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்து விலகி இருப்பதுதான்.


அண்ணாமலை அதிரடி:


இந்நிலையில், சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்துள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை நள்ளிரவில் வீடுதேடி போய் டீ கொடுத்து சமரசம் செய்ய முடியாது" என பதில் அளித்துள்ளார். 


முன்னதாக, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "ஒரு கட்சியில் உள்ளவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே. அப்போது தான் மற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.  பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிடக் கட்சிகள் உள்ளன.


தமிழ்நாட்டிற்கு நான் தோசை இட்லி சுட வரவில்லை, நான் எடுக்கும் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் தலைவர் தான்" என்றார்.