மக்களவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அதிரடி அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த இரண்டு தேர்தல்களிலும், வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:


கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.


ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, தேசிய அளவில் உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி (இந்தியா கூட்டணி) ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. மக்களவை தேர்தலின்போது வட மாநிலங்களில் தேர்தல் வியூகம் அமைத்து, பாஜக வெற்றியில் முக்கிய பங்காற்றிய அமித் ஷா, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகிறார்.


கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியா?


அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலில், தென் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட பாஜக மேலிடம் விரும்புவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


குறிப்பாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. ஏற்கனவே, அங்கு பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் இருப்பதால், அண்ணாமலை போட்டியிட்டால் கோவையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கட்சியினர் நம்புகின்றனர்.


பாஜகவின் மாஸ்டர் பிளான்:


இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என கூறி, ட்விஸ்ட் கொடுத்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும், அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ள அவர், "அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நாங்கள் ஒதுக்கிவில்லை" என கூறியுள்ளார்.


சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதமும், மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றே அண்ணாமலை கூறியிருந்தார்.


அந்த சமயத்தில் இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.