மேற்கு வங்க சட்டப்பேரவையில் சட்ட மேலவை அமைப்பதற்கான தீர்மானம் பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கடந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட 8 முக்கிய அமைச்சர்கள் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர்களை புறவாசல் வழியாக அனுமதிக்கவே சட்ட மேலவை அமைக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை தற்போது உள்ளது. மற்ற 23 மாநிலங்களில் கீழ் அவை எனப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவை மட்டுமே உள்ளது.



இந்த நிலையில் தமிழகத்திலும் சட்டமேலவை அமைப்பதற்கான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கபடும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்றால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமையும் என்ற நிலை உள்ளது. ஒன்றிய அரசு என்ற சொல்லாடலில் தொடங்கி, திரைப்பட ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு வரை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் மேலவை தீர்மானம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்ற பாஜக இசைவு தெரிவிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது


சட்ட மேலவை என்றால் என்ன?


அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2)இன் படி எல்லா மாநிலங்களிலும் இரண்டு அவைகள் இயங்க அனுமதிக்கிறது. இதில் ஓர் அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட கீழ் அவை எனப்படுகிறது. இந்த அவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். சட்ட மேலவையை பொறுத்தவரை கீழ் அவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பது அவசியமாகிறது. கலை, அறிவியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்கள் அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர், விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி கீழ் அவை உறுப்பினர்களாலும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாலும், இளங்கலை பட்டதாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அவை நிரந்தரமான அமைப்பாகும், ஆட்சிக்கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.


மேலவையின் அதிகாரங்கள்


மேலவைக்கு தன்னிச்சையாக சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. கீழ் அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை விவாதிக்கவும், அதற்கு ஒப்புதல் அளிக்கவே மேலவைக்கு அதிகாரம் உண்டு. இரு அவைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பாட்டால் கீழவையின் முடிவே இறுதி முடிவாக இருக்கும்


தமிழ்நாடு சட்ட மேலவை கலைப்பு



தமிழ்நாட்டில் 1921ஆம் ஆண்டு முதல் சட்ட மேலவை செயல்பட்டு வருகிறது. 234 உறுப்பினர்களில் ஒரு பங்கான 78 உறுப்பினர்களை கொண்டு 60 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவையை கலைத்தார். 1986ஆம் ஆண்டு மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மேலவை கலைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். மேலவையில் கருணாநிதியின் செயல்பாட்டை முடக்கவே மேலவை கலைக்கப்பட்டுள்ளதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.


நிறைவேறாமல் போன கருணாநிதியின் ஆசை



இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்ட மேலவையை மீண்டும் அமைப்பதற்கான முயற்சிகளை அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்து வந்தார். கடந்த 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி சட்டபேரவையில் மேலவையை அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்த நிலையில் 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் இந்த முன்னெடுப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


மீண்டும் வருமா சட்டமேலவை ?



இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தது. சட்டமன்றத்தில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் நிலையில், சட்டப்பேரவையில் மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அதனை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றால் மட்டுமே மேலவையை அமைக்க முடியும். இந்த நிலையில் மத்திய பாஜக அரசு இதற்கு ஒப்புதல் தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டமேலவை கலைக்கப்படுமா?- டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி



தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மேலவை தீர்மானத்தை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமா என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம், அதற்கு பதிலளித்த அவர், ‛‛இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மேலவை உள்ள நிலையில் ஏற்கெனவே  மேலவை இருந்த மாநிலமான தமிழகத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கலைக்கப்பட்டுள்ளது, துறைசார் நிபுணர்கள் மேலவைக்கு வரும்போது விவாதம் வலுப்படும்.


தேவைக்காக ஒன்றையும், தேவை இல்லை என்றால் மற்றொன்றையும் பாஜகவினர் பேசி வருகின்றனர். மேலவை வேண்டாம் என்றால் பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள மேலவைகள் அனைத்தையும் கலைத்துவிடுவார்களா? என டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின் தீர்மானத்தை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு தீர்மானத்தை நிறைவேற்ற தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் எனவும், மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதில் பாஜக முனைப்பு காட்டி வந்தாலும் திமுக தனது கடமையில் இருந்து தவறாது,’’ எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


மேலவை மக்களுக்கு பயன்படுமா? என ஆலோசிப்போம்- ஆர்.பி.உதயகுமார்



சட்டமேலவை விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, ‛‛சட்டமேலவை வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அப்போது எம்ஜிஆர் எடுத்ததாகவும், 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவும் திமுக நிறைவேற்றி இருந்த மேலவை தீர்மானத்தை ரத்து செய்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இதனை திமுக செயல்படுத்த முயல்கிறது. மேலவை எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசித்து முடிவெடுப்போம்,’’ எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


மேலவை நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு- வானதி சீனிவாசன்



இந்த விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ‛‛சட்ட மேலவை விவகாரம் குறித்து இன்னும் கட்சிக்குள் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும், கட்சி ஆலோசனைக்கு பிறகே இது குறித்து முடிவெடுக்கப்படும்,’’ என தெரிவித்துள்ளார்.