தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 448 என்ற நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியது.


இந்த நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு இன்று 9 ஆயிரத்து 118 ஆக தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 5 லட்சத்து 27 ஆயிரத்து 835 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதிகபட்சமாக கோவையில்  இன்று மட்டும் 1,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 559 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 559 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




இன்றைய நிலவரப்படி, சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 475 ஆகும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆண்கள் 14 லட்சத்து 3 ஆயிரத்து 219 பேர் ஆவர். பெண்கள் மட்டும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 607 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 5 ஆயிரத்து 13 நபர்கள் ஆவர். பெண்கள் 4 ஆயிரத்து 105 நபர்கள் ஆவர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 22 ஆயிரத்து 720 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 66 ஆயிரத்து 793 ஆகும்.




மாநிலம் முழுவதும் இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 210 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 109 பேர் தனியார் மருத்துவமனையிலும், 101 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 953 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 44 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.  


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் கட்டுக்குள் இருந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 21-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதன் அடிப்படையில் அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க : WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு..!