மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளமான 120 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் தற்போது 43 வது முறையாக 580 நாட்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை நேற்று மாலை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது. 



நீர் திறப்பு:


இதனிடையே கடந்த 28 ஆம் தேதி முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்து தற்போது 21,500 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வினாடிக்கு 1,03,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு வினாடிக்கு 81,500 கன அடி வீதமும், காலை 7 மணிக்கு ஒரு லட்சம் கன அடி வீதமும், காலை 8 மணிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  


கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திறந்து வைத்தார். சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு, அணையின் நீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெள்ள அபாய எச்சரிக்கை:


மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


இதேபோன்று காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.